Monday 12 August 2013

‘தலைவா’ பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார்: விஜய் நம்பிக்கை

சேலத்தில் ‘தலைவா’ திரைப்படத்தின் திருட்டு சிடி தயாரித்தவர்களை பிடித்துக் கொடுத்த விஜய் ரசிகர்களையும், காவல் துறையையும் விஜய் பாராட்டியதோடு, தமிழக முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

திருட்டு சி.டி. தயாரிப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை தயாரித்தாலோ, விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். 

நமது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார். என்.எல்.சி. பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். 

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்தவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்களும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதலமைச்சர் ‘தலைவா’ பிரச்சினையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் ‘தலைவா’ வெளிவர ஆவன செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.