Sunday 28 September 2014

மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!

     
 
      வழிவழியாக வந்த அரசபதவி ஏற்ற மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!
அத்தகைய சிறப்பில்லாத ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அதில் பெருமையில்லை. 
      துணிந்து போரிடும் வலிமையும் முயற்சியும் உடையவன் பெறுவானேயானால் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்ணிற நெட்டி கோடையில் உலர்ந்து சுள்ளி போல் மிகவும் நொய்மையுடையதாம். குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்கொற்றக்குடையையும் முரசையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. என்கிறது இப்புறப்பாடல்.
பாடல் இதோ..

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் றாயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
5
சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10
நொய்தா லம்ம தானே மையற்று
விசும்புற வோங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75)
புறநானூறு 
75.
சோழன் நலங்கிள்ளி
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி 
பாட்டு.


பாடல் வழியே..

மகிழச்சி நிறைந்த மக்களைக் கொண்டதாக ஒருநாடு இருக்கவேண்டுமென்றால் வரிச்சுமையிருக்கக்கூடாது என்ற கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.

மக்களிடம் அதிகமாக வரியை வசூலிப்பது என்பது பிச்சையெடுப்பதற்கு இணையானது என்ற கருத்து சுட்டப்பட்டுள்ளது.

( சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து 
உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான். 
வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின் 
இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று
மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக் 
கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண் 
வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று 
என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசு முறை மூத்தோர்க்குப் 
பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை 
யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி 
விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து 
பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய 
சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின், 
அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்என்றான். இங்ஙனம் 
சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.) 
        சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனே அரசின் கடமை பற்றி இவ்வாறு கூறியிருப்பது இன்றைய நிலையிலும் நிகழ்காலச் சமூக நிலையை ஒப்பிட்டு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

Wednesday 3 September 2014

ஆசிரியப்பணி அறப்பணி.....

       

       ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள். அத்தகைய ஆசிரியர்களை வணங்கி அவர்களின் சேவையை நினைவு கூறும் நாளே ஆசிரியர் தினம். ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை நாடுமுழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர். 
        ஆசிரியரை பெருமைப் படுத்துவோம் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..! இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. 
      டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு அவருடைய சேவையை பாராட்டி 133 கௌரவ டாக்டர் பட்டங்கள் வரை கிடைத்துள்ளன. எளிமையான வாழ்க்கை நாட்டின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் உள்ள அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார். அவர் எப்படி எளிமையாக வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 
       இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது. ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 
       1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது. தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை. ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். 

         எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆசிரியருக்கு அடுத்த இடம்தான் இறைவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.அறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம்.