Thursday 5 September 2013

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


வாழ்க்கை என்பது என்ன... கடவுள் இருக்கிறாரா இல்லையா...’ போன்ற கேள்விகளை உருவாக்கி, தேடலைத் துவக்கும் ஞானகாரகனான கேதுதான் மகம் நட்சத்திரத்தை ஆள்கிறார். சிம்ம ராசிக் கூட்டினில் இருப்பதால் சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் கேதுவும் வலிமையோடு இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறார்கள். இதனால் சூட்சுமமான புத்தியோடு சேர்ந்த ஆளுமையும் இருக்கும். எதையுமே தைரியமாக அணுகுவார்கள். 

மகம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் அதிபதி செவ்வாய். இவரோடு ராசியாதிபதி சூரியனும், நட்சத்திரத் தலைவராக கேதுவும் ஆள்கிறார்கள். இப்படி இரண்டு ராஜகிரகங்கள் ஒன்றாக இருப்பதால், கல்வியில் நல்ல அடித்தளம் அமையும். மிகச் சிறந்த பள்ளியில் படிக்க முடியும். 6 வயது வரை கேது தசை நடைபெறும். அப்போது மட்டும் கொஞ்சம் உடம்பு படுத்தியெடுக்கும். 7 வயதிலிருந்து 26 வரை சுக்கிர தசை நடைபெறும். தோற்றப் பொலிவு அப்படியே மாறி விடும். படிப்பில் கவனம் இருந்தாலும், கலைகளுக்கும் இடம் தருவார்கள். இந்த நல்ல மாற்றங்கள் 13 வயதுக்குப் பிறகுதான் வரும். அதுவரையிலும் கூச்சமும் தடுமாற்றமும் இருக்கும். பள்ளியில் எந்தப் போட்டி நடந்தாலும் பங்கேற்பார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல், கெமிக்கல் எடுத்தால் நல்லது. விலங்கியல், தத்துவம், வரலாற்றுத்துறை ஆழமாக ஈர்க்கும். பி.காம். படிப்பதை விட இவர்கள் பி.பி.. படிப்பது நல்லது. மருத்துவத்தில் டென்டல் சர்ஜன், ஆர்த்தோ என்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மிகச் சிறந்த நிபுணராக வருவர். தாய்மொழியில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இரண்டாம் பாதத்தின் அதிபதியாக ரிஷப சுக்கிரன் வருகிறார். பொதுவாகவே கேது சொந்த ஜாதகத்தில் நன்றாக இல்லாத பட்சத்தில், பிறக்கும்போது வரும் கேது தசை ஏதேனும் சிறுசிறு தொந்தரவுகள் கொடுக்கும். 4 வயது வரை இப்படித்தான் இருக்கும். 5லிருந்து 24 வயது வரை சுக்கிர தசை நடைபெறும். முதல் பாதத்தை விட பெரிய அளவிலான நன்மைகளை சுக்கிரன் செய்வார். பாட்டு, நடனம், இசை என ஏதேனும் ஒரு கலையைக் கற்றுக் கொள்வார்கள். 25லிருந்து 30 வயது வரை சூரிய தசை வரும். அதற்கு முன்னதாகவே கல்வியில் பெரும் பகுதியை முடித்துவிடுவது நல்லது. கல்லூரியில் தாவரவியல், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் என்றால் ஆர்க்கிடெக்ட், சிவில் சேரலாம். பி.காம். படிக்கலாம். ஏரோநாட்டிகல்தான் லட்சியம் என்று சிலர் படிப்பார்கள்.

மூன்றாம் பாதத்தை புதன் ஆள்வதால் சூட்சும புத்தி நிரம்பியிருக்கும். அண்டமே சிதறினாலும் அசராத மனநிலை கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு வருடங்கள் கேது தசை வழக்கம்போல் உடல் உபாதையைக் கொடுக்கும். 3 வயதிலிருந்து 22 வரை சுக்கிர தசை நடைபெறும்போது அறிவுக்கூர்மை கூடும். பிளஸ் 2 படிக்கும்போது பள்ளியில் முதல் மதிப்பெண்ணுக்கு முயற்சிப்பார்கள். வாழ்க்கை பற்றிய தேடல் கிட்டத்தட்ட 15 வயதில் தொடங்கும். எழுத்தாளர்கள், பத்திரிகை ஆர்வம் என்று இறங்குவார்கள். படிப்பில் படு சுட்டியாக இருந்து, விருப்பப்பட்ட கல்லூரியில் படிப்பார்கள். 23 வயதிலிருந்து 28 வரை சூரிய தசை வரும்போது தர்க்கம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார்கள். இந்த பாதத்தில் பிறந்த பலர் ஆங்கில இலக்கியம் படித்து விட்டு, பிறகு தொழிலுக்காக வேறு ஏதேனும் படிப்பார்கள். இயற்பியல், தாவரவியல் படிப்பில் தனி கவனம் செலுத்துவார்கள். புதன் ஆள்வதால் டிசைனிங், ஆர்க்கிடெக்ட் என்று படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

நான்காம் பாதத்தின் அதிபதி சந்திரன். இவர்களுக்கு மொழியறிவு அதிகம் இருக்கும். பிறக்கும்போதே கேது தசை சில மாதங்கள் இருக்கலாம். 2 வயதிலிருந்து 20 வரை சுக்கிர தசை நடைபெறும்போது, எத்தனை வசதி இருந்தாலும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல வாடுவார்கள். என்னதான் சுக்கிர தசை நடந்தாலும், பள்ளி வாழ்க்கை எப்போது முடியும் என்று அலுப்பு வரும். சிலர் குடும்பச் சூழ்நிலை காரணமாக விடுதியில் தங்கி படிப்பார்கள். 21 வயதிலிருந்து 26 வரை நடக்கும் சூரிய தசை வாழ்க்கையை சட்டென்று மேலேற்றும். சுக்கிர தசையை விட இந்த சூரிய தசைதான் நன்றாக இருக்கும். பொறியியலில் எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோமொபைல் படிக்கலாம். விஸ்காம் படித்தால் எதிர்காலம் உண்டு. சி.. படிப்பை எளிதாகத் தாண்டுவார்கள். மருத்துவத்தில் .என்.டி, ரேடியாலஜி, அனஸ்தீஸியா போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக கேது இருப்பதால், ஞானியர்களையும் மகான்களையும் வணங்குவது நலம். ஜீவ சமாதிகள் இருக்கும் பழமையான தலங்களை தரிசிக்கும்போது கல்வியில் முன்னேற்றம் காணலாம். அப்படிப்பட்ட தலமே நெரூர் ஆகும். இங்குள்ள சிவாலயத்துக்கு பின்புறத்தில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகாஞானி ஜீவ சமாதி அடைந்தார். கரூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது நெரூர்.

பூரத்தில் பிறந்தவர்கள் இனிமையாகப் பேசுவார்கள். எல்லோரையும் வசீகரிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். நட்சத்திர அதிபதியாக சுக்கிரன் வருவதால், பெற்றோரின் ஆசைப்படி கல்வி கிடைக்கும். படிக்கிறார்களோ இல்லையோ, நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்வார்கள். கல்வியைக் கூட கலையாகத்தான் பார்ப்பார்கள். ‘படிப்பைத் தாண்டி சாதிக்க நிறைய இருக்குஎன்பதை பள்ளியிறுதிக்குள்ளாகவே புரிந்து கொள்வார்கள். அதேசமயம் படிப்பிலும் குறை வைக்க மாட்டார்கள். பொதுவாகவே இவர்களுக்கு சுக்கிர தசை முதலிலேயே வந்து விடுவதால், கல்வியில் தடையோ பிரச்னைகளோ எதுவும் வராது.

பூரம் நட்சத்திரத்தின் அதிபதியாக சூரியனே வருகிறார். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் இரட்டை சூரிய சக்தியை தன்னிடத்தே கொண்டவர்கள். 19 வயது வரை சுக்கிர தசை நடக்கும். சிறிய வயதில் துடுக்குச் சுக்கிரனாக இவர்களிடத்தில் சுக்கிரன் செயல்படுவார். ஆசிரியர்களை கேலி செய்து மாட்டிக் கொள்வதும் உண்டு. ஒருவித பிரமிப்பை தன்னைச் சுற்றிலும் உருவாக்கியபடி இருப்பார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களோடுதான் நட்பு வைத்திருப்பார்கள். மரியாதைக்குரிய மதிப்பெண் எடுப்பார்கள். 19 வயதுக்குள் காதல் அரும்பி, உதிரும். இதனால் படிப்பில் தடை ஏற்படும். முக்கியமாக பிளஸ் ஒன், பிளஸ் 2 படிக்கும்போது எச்சரிக்கை வேண்டும். பெரும்பாலானவர்கள் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டு, பிளஸ் 2வில் பாஸ் ஆனாலே போதும் என்று இருப்பார்கள். 20 வயதிலிருந்து 25 வரை ராசிநாதனான சூரிய தசையே நடைபெறும். சிலர் ராணுவத்தில் சேர ஆசைப்படுவார்கள். கல்லூரியில் அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். மருத்துவத் துறையில் கண் மற்றும் நரம்பு சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.. படிப்பில் ஹெச்.ஆர். துறை ஏற்றது. பொறியியல் எனில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.

இரண்டாம் பாதத்தை அதன் அதிபதியான புதனும், சூரியனும், சுக்கிரனும் சேர்ந்தே ஆள்வர். 14 வயது வரை சுக்கிர தசை இருப்பதால், புதன் அந்த வயதிலேயே நுணுக்கமாக யோசிக்க வைப்பார். அறிவுபூர்வமான வழியில் செலுத்துவார். இன்டோர் கேம்ஸில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். 15 வயதிலிருந்து 20 வரை சூரிய தசையில், சுக்கிர தசை கொடுத்த அலட்சியப்போக்கு கொஞ்சம் மாறும். கல்லூரிகளில் கௌரவம் பெறுவார்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் ஆர்வம் செலுத்துவார்கள். 21 வயதிலிருந்து 30 வரை சந்திர தசை நடைபெறும். ஜாதகத்தில் சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ, சேர்க்கை பெற்றிருந்தாலோ விபரீத ராஜயோகம் உண்டாகும். முன்னேற்றத்திற்கான எல்லா வழிகளும் திறக்கும். பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல கட்டிடத் திட்ட வரைபடம், ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்ற படிப்புகள் இயல்பாகவே நன்றாக வரும். மருத்துவத்தில் வயிறு, நரம்பு, கண் போன்ற பிரிவுகளில் நிபுணத்துவம் பெறலாம்.

மூன்றாம் பாதத்தை துலாச் சுக்கிரன் ஆட்சி செய்கிறார். கிட்டத்தட்ட 8 வருடம் சுக்கிர தசை நடைபெறும்போது தந்தையார் மிகப்பெரிய பதவிகளில் அமர்வார். 9 வயதிலிருந்து 14 வரை நடைபெறும் சூரிய தசையில் அடிக்கடி தலைவலி வரும். ஓரளவிற்கே மதிப்பெண்கள் எடுப்பார்கள். 15 வயதிலிருந்து 24 வரை சந்திர தசை நடக்கும்போது கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் நுணுக்கமான படிப்பில் ஆர்வம் இருக்காது. மருத்துவத்தில் சரும நோய், உடல் பொலிவுக்கான படிப்புகள் ஏற்றவை. ஃபேஷன் டெக்னாலஜியை மறக்க வேண்டாம். விஸ்காம், டி.எஃப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசை சார்ந்த கல்வியும் பயனுள்ளதே!


நான்காம் பாத அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருவதால், முதல் நான்கு வருட சுக்கிர தசை சுகவீனங்களை தரும். 5 வயதிலிருந்து 10 வரையிலான சூரிய தசையில் புத்திக் கூர்மை அதிகரிக்கும். கலெக்டர் கையால் பரிசு வாங்குவதெல்லாம் இப்போதுதான். 11 வயதிலிருந்து 20 வரையிலும் சந்திர தசை நடைபெறும்போது சுமாராகத்தான் படிப்பார்கள். பள்ளித் தேர்வுகளில் நிறைய மதிப்பெண் எடுத்து விட்டு, அரசாங்கத் தேர்வுகளில் கோட்டை விடுவார்கள். சந்திரன் சொந்த ஜாதகத்தில் வலிமையாக இல்லாவிடில், இக்கட்டான தருணங்களில் மறதியைத் தருவார். பெற்றோர் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். 21 வயதிலிருந்து 27 வரை செவ்வாய் தசை நடைபெறும்போது கல்வியில் உச்சம் தொடுவார்கள். இவர்கள் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துப் படிக்கலாம். ..எஸ். தேர்வுக்கு நிச்சயம் முயற்சிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகளில் சாதிப்பார்கள். நிர்வாகம் சார்ந்த இளங்கலை படிப்பு பெரிய பதவிக்கு கொண்டு போகும்.


பூரத்தில் பிறந்தவர்களுக்கு பாடத்தில் முதன்மை தருபவர், பரிமுகக் கடவுள் எனும் திருவந்திபுரம் ஹயக்ரீவர். ஸ்ரீமந்நாராயணன் அர்ச்சா ரூபியாய் எழுந்தருளி, ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைஷ்ணவத் திருத்தலங்களில் இது குறிப்பிடத்தகுந்தது. வேதாந்த தேசிகன் எனும் ஞானி இத்தல ஹயக்ரீவரை பூஜித்ததாக வரலாறு கூறுகின்றது. தமிழகத்திலேயே ஹயக்ரீவருக்கு முதன்முதலில் கோயில் அமையப் பெற்றது இங்குதான். இங்கு சிறு மலை மேல் பரிமுகப் பெருமாள் லட்சுமி தேவியுடன் லட்சுமி ஹயக்ரீவராகத் திருக்காட்சி அளிக்கின்றார். கடலூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment